Friday 14 August 2020

சுதந்திரம் அடைந்து விட்டோமா...


வரைபடம் : சஞ்சுனா தேவி 

ஆகஸ்ட் 15 அன்று மட்டும் நம்ம பயபுல்லைங்களுக்கு எங்க இருந்து தான் தேசப்பற்று வருதுனே தெரியல..

உண்மையான தேசப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அவரவர் கடமையை சரியாக செய்தாலே போதும்.தினமும் சுதந்திர தினம் தான். காந்தியின் கேள்விக்கு இன்று வரை பதில் யாரிடமும் இல்லை. நள்ளிரவில் கழுத்து வரை அணிகலன் அணிந்து சென்றாலும் திருட்டு போகாத நிலை வந்தால் மட்டுமே சுதந்திரம் அடைந்ததாக கூறினார். ஆனால் இன்றைய நவீன இந்தியாவில் நள்ளிரவில் சட்டத்தையே திருட்டி சென்று விடுகிறார்களே..

பாரதியார் பாடினார் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று. உண்மையில் நாம் ஆனந்தமாக தான் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோமா..?

நமக்கு தான் சுதந்திரம் கிடைத்து விட்டதே. பிறகு ஏன் எல்லையில் இராணுவ வீரர்கள் காவல் காக்க வேண்டும் ?

நமக்கு தான் சுதந்திரம் கிடைத்து விட்டதே. பிறகு ஏன் பிறருக்கு பயந்து வாழ வேண்டும்? 

ஆட்சி என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
வறுமை என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
வேலை என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
சிரிப்பு என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
சம உரிமை என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
மொழி என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
மதம் சாதி என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
பண்பாடு என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
நாகரீகம் என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
ஆடை என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.
பெண் முடிவு எடுப்பதில் ஒரு அடிமைத்தனம்.
ஆண் கௌரவம் என்ற பெயரில் ஒரு அடிமைத்தனம்.

இப்படி பல அடிமைத்தனங்களுக்கு மத்தியில் எப்படி சுதந்திரம் பெற்றீர்கள் என்று தான் தெரியவில்லை.?

ஊழல் இல்லாத நாடா ..?
கருப்புப் பணம் இல்லாத நாடா..?
பொறாமை இல்லாத நாடா ..?
வன்மம் இல்லாத நாடா ..?
வளர்ச்சி அடைந்த நாடா ..?
கொலை கொள்ளை கற்பழிப்பு இல்லாத நாடா ..?
அரசியல் மற்றும் அரசு பிழைகள் இல்லாத நாடா ..?
மண்வளம் மனவளம் நிரம்பிய நாடா ..?
வல்லரசு அடைந்த இல்லை இல்லை நல்லரசு இருக்கும் நாடா ..?
காசுக்கும் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஓட்டை விற்காத நாடா ..?
மக்களுக்கான சட்டம் உள்ள நாடா ..?
இல்லை சட்டத்திற்காக மக்கள் உள்ள நாடா ..?
படித்தவர்கள் ஆட்சி செய்யும் நாடா ..?
சம உரிமை கிடைத்து விட்ட நாடா ..?
ஆதார் அட்டை இருந்தும் இல்லாமலும் தனது அடையாளத்தை இழக்காமல் இருக்கும் நாடா ..?
விவசாயம் செழித்துக் கொண்டு இருக்கும் நாடா ..?
ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் இறக்குமதியில் மதியை இழந்து கொண்டு இருப்பதே தெரியாமல் இருக்கும் நாடா ..?
கல்வி மருத்துவம் குடிநீர் மின்சாரம் இதில் அதிக உபரி சம்பாதிக்காத நாடா ..?
மது மாது சூது அற்ற நாடா ..?
அம்பானி மல்லையா போன்றவர்களின் கடனை தள்ளுபடி செய்யும் அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை என்று அறிக்கை விடுத்து உள்ளதே இது தான் சுதந்திர நாடா ..?
இந்தி சமஸ்கிருத மொழிகளை புதிய கல்விக் கொள்கையில் ஆதரிக்கும் மூடர்கள் இல்லாத நாடா ..?
ஒரு ஓட்டை போட்டு விட்டு மூன்று முதல்வர்களை சந்திக்காத நாடா ..?
பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணீர் கூட தர மறுக்கும் மக்கள் இல்லாத நாடா ..?
ஒரே நாளில் ஒரே இரவில் நாடே விற்பனைக்கு என்ற சூழல் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா..? 
தேசியக் கொடியில் இருக்கும் இளஞ்சிவப்பு நிறத்தை கூட காவி என்று நினைக்கும் அறிவாளிகள் அற்ற நாடா ..?
படித்தப் படிப்பிற்கு வேலை இருக்கும் நாடா ..?
உள்நாட்டு உற்பத்தியில் பன்னாட்டு வளர்ச்சிக்கு நிகராக வந்த நாடா ..?
சிறிது உடல் தெரிந்தால் கூட கற்பு பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லாத நாடு தானே ..?
பல குற்றங்கள் உண்டு ஆனால் தண்டனை கிடைக்காத நாடு அல்லவா ..?
நீதி தேவதையின் கண் மூடி இருக்கும் நாடு தானே ? அப்புறம் எப்படி பயம் இருக்கும் ?
காசு இருந்தால் நீ தான் எல்லாம் என்று நினைக்கும் நாடு தானே? 
ஆங்கிலம் பிழையில்லாமல் பேசினால் அறிவாளி என்று நினைக்கும் நாடு தானே?
தமிழ் பற்றிப் பேசினால் பாதுகாப்பு எல்லையை விட்டு
வெளிவர தயங்குகிறோம் என்று ஏளனம் செய்யும் நாடு தானே?
அன்னியக் கலாச்சாரத்தின் மீது மோகம் குறையாத நாடு தானே ?
தாய்மொழியில் வளர்க்காத அறிவை பிறமொழியில் வளர்க்க நினைக்கும் மேதாவிகள் நிறைந்த நாடு தானே ?

இப்படி பல கேள்விகள் இருந்தும் எப்படி சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்..?

மற்ற நாட்களில் தேசப்பற்று என்பது கிடையாது. ஆம் மாநிலத்திற்கு மாநிலம் மாவட்டத்திற்கு மாவட்டம் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு அட ஏன் வீட்டுக்கு வீடு கூட ஒற்றுமை இல்லை. கேட்டால் வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா என்று மார்பை தட்டிக் கொள்வது தான் சுதந்திரமா..? 

ஒரு நல்ல விஷயத்தை சக மனிதன் கூறினால் அவன் மூடன் மொரடன் பைத்தியம் வேலையில்லாதவன் என்ற பல விமர்சனங்கள் வரும். அதுவே நடிகர் நடிகை சொல்லி விட்டால் போதுமே வேத வாக்காக செயல்படுவீர்கள் அல்லவா ?

இந்தியாவில் பிறந்து வளர்ந்து படித்து பிறகு வேலை மட்டும் இந்தியாவை விட்டு வெளியே சென்று பார்ப்பது தேசப்பற்று அல்லவா ?

அன்று ஆங்கிலேயர்கள் இடம் அடிமையாக இருந்தோம் இன்று குறைந்தது யாரோ ஒருவரின் அன்பில் காதலில் நட்பில் உறவில் கற்பனையில் ஆட்சியில் பழியில் இப்படி பல கோணத்தில் அடிமையாக தான் இருக்கின்றோம் இனியும் இருப்போம். அப்புறம் எப்படி சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்? 

சுதந்திரம் நம்மிடம் உள்ளது ஆனாலும் அடிமைகளாகவே இருக்கின்றோம். இது அறியாமையா.? இல்லை அறிய முயற்சி செய்யாமல் இருப்பதா.? 
சுதந்திரம் என்று எதனை குறிப்பிடுகிறோம் என்றே நமக்கு தெரியவில்லை.. நீங்கள் நீங்களாக இருப்பதே சுதந்திரம் தான்.. சுதந்திர தினத்தில் கட்செவியில் முகநூலில் இப்படி சமூகத் தளத்தில் தேசப்பற்று குறித்து விளம்பரம் படுத்துவதால் மட்டும் நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று எண்ணித் துள்ளிக் குதிக்க வேண்டாம். உண்மையான சுதந்திரம் உங்கள் மனதில் உண்டு. நினைத்ததை அடைந்து ஆசைப்பட்டதை வென்று மகிழ்ச்சி யாக நீங்கள் நீங்களாக இருப்பது தான் உண்மையான சுதந்திரம்.

என்னுடைய வயதிற்கு எனக்கு கிடைத்த சில அனுபவத்தை வைத்து ஏதோ எழுதி விட்டேன். இதனால் நான் தேசப்பற்று இல்லாதவள் என்று நினைத்து விட வேண்டாம். என் தேசம் இன்னும் சுதந்திரத்தை அடைய வில்லையே என்ற ஏமாற்றத்துடன் இதயம் கணத்து எழுதி இருக்கிறேன். இதை எல்லாம் கூறினால் ஏன்டி இந்தியன் என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவோம் அல்லவா ? ஒரு நாள் மட்டும் தேசியக் கொடியை மார்பில் குத்தினால் போதாது. பாடினால் பேசினால் போதாது. செயல்படுங்கள் . தேடுங்கள் எது உண்மை சுதந்திரம் என்று. நான் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. வீட்டில் எனக்கு இருக்கும் சுதந்திரம் நட்பு வட்டத்தில் சமூகத்தில் எனக்கு இல்லை. என்னுடைய அங்கீகாரம் பிறரின் அகங்காரத்தால் மறுக்கப்படுவதால் எனக்கான சுதந்திரம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு என்றாவது ஒரு நாள் சுதந்திரம் கிடைக்கும் அப்போது கொண்டாடுவேன் அப்போது எனக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.இன்று பல தியாகிகளின் உயிர் தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தை அவர்களின் ஆத்மாவிற்கு மன்னிப்புக் கேட்கும் நாளாக மட்டும் பார்க்கிறேன். அவர்களின் தியாகம் இன்று இல்லையென்றால் என்ன என்றாவது ஒரு நாள் அது சரிக்கட்டப்படும் என்ற நம்பிக்கையில்  விடியலை நோக்கி பயணிக்கிறோம் என்று கூறும் தினமாக கருதுகிறேன்.


கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.. 
 

4 comments:

said...

Correcta soninga sis I also thought this

Unknown said...

True words

Anu patricia said...

Spr ka

Ramya manoharan said...

🔥🔥🔥🔥🔥 semmaaa kaa 😍

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...