Sunday 18 October 2020

யாசகர்கள் இல்லா உலகு...


 #ஈரோடு_அட்சயம்_அறக்கட்டளை 

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

#பகுத்துண்டு_பல்லுயிர்_ஓம்புக

#அன்பிற்கும்_உண்டோ_அடைக்கும்தாழ்

#யாசகர்கள்_இல்லா_உலகு

இடம் : காளை மாட்டுச் சிலை ஈரோடு

நாள் : 18.10.2020

பொதுவான ஒரு கருத்து எண்ணம் போல் வாழ்க்கை என்பது தான். ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் போல நாம் எண்ணியத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பல நிகழ்வுகள் நடந்தேறும். சில நிகழ்வுகள் மாறுதலும் ஆறுதலும் விதைக்கும் பல நிகழ்வுகள் பாடங்களையும் அனுபவத்தையும் அறுவடை செய்யும். எண்ணற்ற எண்ணங்களின் தொகுப்பு தான் மனிதனின் இயல்பு வாழ்க்கை. பிறந்தோம் வாழ்ந்தோம் இழந்தோம் இறந்தோம் இது தான் வாழ்க்கை சுழற்சியாகவே இருக்கும். வெகு சிலரே சற்று வேறுபட்டு இயங்குவார்கள் இறங்குவார்கள். நம்மை சுற்றி பெரும்பாலும் சுயநலம் மிக்கவர்களே அதிகம். பொதுநலம் உடைய நபர்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் போல சிலரே உள்ளனர். 

சுயநல வாழ்க்கைக்கு கூட பிரச்சினைகள் பெரியதாக இருக்காது. ஆனால் பிறர் நலனில் அக்கறை காட்ட பெரிய இடர்பாடுகளையும் குறைகளையும் கடந்து பயணிக்க வேண்டும். பொய்களையும் கேலிகளையும் குறைகளையும் மட்டுமே வளர்த்து வரும் சமூகத்தில் சற்று மாற்றத்தையும் மாறுதல்களையும் உருவாக்கும் சமூகர்களை இந்த சமூகம் ஆதரிப்பதில்லை. ஒரு சிலர் ஆதரிப்பார்கள் காரணம் அதனை வைத்து அவர்களுக்கு ஒரு ஆதரவுக் கூட்டத்தையும் மாயையும் உருவாக்கிக் கொள்வதற்கு மட்டுமே. 

ஈரோடு அட்சயம் அறக்கட்டளை தொடங்கிய நாள் முதல் கல்லூரி நாட்களிலும் யாரேனும் ஒருவர் மூலமும் ஊடகங்கள் வழியும் கேட்டறிந்ததுண்டு. எதார்த்தமாக நான் வசிக்கும் பகுதியில் ஒருவரை மீட்பதற்காக அவர்களை அணுகினேன் அப்போது தான் அவர்களுடன் பயணிக்க ஒரு வாய்ப்பை ஏற்பட்டது. அதனை எந்த அளவுக்கு கடைப்பிடிக்க போகிறேன் என்பது தெரியவில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு அனுபவங்களை கற்றுக் கொண்டே இருக்கிறேன். அந்த அனுபவத்தின் தொகுப்பு தான் இப்பதிவு. 

இவ்வுலகில் பிறந்த யாவரும் யாசகர்களே.கருவறையில் தொடங்கி கல்லறை வரை இரவலுடன் தான் பயணிக்கிறோம்.நாகரீகம் என்ற பெயரின் அடிப்படையில் நாம் அனைவரும் யாசகராக தெரிவதில்லை. அதுவே தெருவில் இருந்தால் யாசகர் என்று நினைப்பது மனித இயல்பு. மனிதனின் வளர்ச்சி தகவல் தொடர்புகளை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்ல. அதன் மூலம் தொடர்புகளை நெருங்க வேண்டுமே தவிர தொலைவுகளை விரிவுப்படுத்தி கொண்டே செல்லக் கூடாது. உலோகத்துடன் பேசியே உயிருள்ள மனிதர்களுடன் பேச மறந்து விட்டோம் என்பதே நிதர்சனம். யாசகர்கள் இல்லாத உலகை படைப்போம். ஈரோடு அட்சயம் அறக்கட்டளை மாபெரும் மாற்றத்தை நாளுக்கு நாள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் மூன்று பேரை மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்த்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டது. எதிர்பாராத விதமாக நானும் அந்நிகழ்வில் பங்கேற்றேன். அந்த நபருக்கு 56 வயது பக்கமாக இருக்கும். காது கேட்கவில்லை வாய் பேச இயலவில்லை. அவரின் பெயரும் தெரியவில்லை. அவருடன் இருந்த நேரங்கள் என் வாழ்வில் நீங்காத அனுபவம் தான். அவருக்கு நான் வைத்த பெயர் மார்க்கண்டேயன். அவருடன் மட்டுமல்ல யாசகர்கள் பார்த்தாலே எனக்கு என்னுடைய சதாசிவம் தாத்தா தான் நினைவுக்கு வருவார். ஏதோ ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற செய்தியே மனதிற்கு அமைதி தருகிறது. 

இது போன்ற செயல்களுக்கு தொடர் ஆதரவும் பங்களிப்பும் நாம் வழங்க வேண்டும்.சேவை என்பதை கடந்து இது நம் கடமை நம் பொறுப்பு என்ற உணர்வு இருந்தாலே இவர்களை போன்ற யாசகர்கள் உருவாக மாட்டார்கள். உருவாக்க மாட்டோம். அன்பை விதைத்து அறுவடை செய்வோம். இருக்கும் வரை இரக்கதோடு இருப்போம். புத்தகங்களையும் பிறரையும் வாசித்து விமர்சித்தது போதும். நம்மையும் நம்மை சுற்றியும் இருக்கும் மனங்களையும் உயிர்களையும் நேசித்து வாசித்து யோசித்து செயல்படுவோம். மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றத்தை நம்மிடம் இருந்து செயல்படுத்துவோம். நம்மிடம் இருந்து மாற்றமில்லை என்றால் பிறரிடம் மாற்றம் ஏற்படாது அதை எதிர்பார்க்கவும் கூடாது.

நல்ல விடியலை நோக்கி பயணிப்போம். அன்பையும் உணவையும் உணர்வையும் ஆறுதலையும் மாறுதலையும் வார்த்தையும் நம்பிக்கையும் சேர்த்து விதைத்துக் கொண்டே பயணிப்போம்..

நன்றி ஈரோடு அட்சயம் அறக்கட்டளை. ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக இருந்தாலும் இன்று பல தன்னார்வலர்கள் (ம) நிறுவனங்களின் உதவியுடன் செயல்பட்டு வரும் ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.

நம்பிக்கையுடன் வைசாலி செல்வம்.

பின் குறிப்பு;

யாசகம் வழங்காமல் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குங்கள். ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு நிதி உதவி மூலம் பலர் வாழ்க்கைக்கு தங்களால் ஒளி வழங்க இயலும். தயவு கூர்ந்து பகிர்ந்து பயன்படுத்தவும். யாசகர்கள் இல்லா உலகை உருவாக்க நீங்களும் உதவுங்கள் உறவுகளே.

வங்கி விவரம்;

*மீட்பு பணிக்கு நன்கொடையாக உதவி செய்பவர்களுக்காக:*

Name : Atchayam trust,
Account No:510101002434791
BANK name: CORPORATION BANK, komarapalayam. 
IFSC : CORP0000876

Or

Gpay:+919943908424

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...